சென்னை,

நாளை மறுநாள் (19ந்தேதி) வெளியாகிறது பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) தேர்வு முடிவு.  அன்று முதலே மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

08.03.2017 முதல் 30.03.2017 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 19.05.2017 அன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1. http://www.tnresults.nic.in/

2. http://www.dge1.tn.nic.in/

3. http://www.dge2.tn.nic.in/

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல் 25.05.2017 முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து http://www.dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், அன்றே பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை மார்ச் 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

மார்ச் 2017 பத்தாம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 19.05.2017 (வெள்ளிக் கிழமை ) முதல் 22.05.2017 (திங்கட் கிழமை) மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுகூட்டல் கட்டணம்

பகுதி I மொழி – ரூ.305/- பகுதி II மொழி (ஆங்கிலம்) – ரூ.305/- பகுதி III கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் – ரூ.205/- பகுதி IV விருப்ப மொழிப்பாடம் – ரூ.205/-

மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு, ஜூன் / ஜூலை 2017 மார்ச் 2017-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும் / வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.