சென்னை: 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற  இன்றுமுதல் வேலைவாய்ப்பு இணையதளத்தில் ஆன்லைன்மூலம் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்புத்துறை அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளும் முடங்கின. இதனால்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலனை காக்க 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி,  பொதுத்தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டது. அதில் 100 சதவிகிதம் தேர்ச்சி என்றும்,  4,68,070 மாணவர்களும்,  4,71,759 மாணவிகளும்  தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில் நாளை முதல் (23–ந் தேதி) பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி,  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை)  முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. எனவே அந்த மாணவர்களின் கல்வித்தகுதியை அவர்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகளை முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இணைந்து மேற்கொள்ள சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக பதிவு செய்யவேண்டும். மாணவர்களின் ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்லிடப் பேசி எண்கள் ஆகியவற்றைக் கட்டாயமாகப் பதிவு செய்யவேண்டும்.

மாணவர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை முகவரிக்கான அடையாள அட்டையாகக் கருதவேண்டும். நாளை தொடங்கும் வேலைவாய்ப்புப் பதிவுப் பணிகள் நவம்பர் 6–ம் தேதி வரை தொடரும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பதிய வேண்டிய முகவரி
https://tnvelaivaaippu.gov.in/