சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள்,  வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால், குறிப்பிட்ட, புகைப்படத்துடன் கூடிய  11 ஆவணங்கள்  மூலம் வாக்களிக்கலாம் என்று அறிவித்துள்ளதுடன், வாக்காளர் சீட்டைக்கொண்டு வாக்களிக்க முடியாது என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில்  ஏப்ரல் 6ம் தேதி  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம்  விறுவிறுப்பாக செய்து வருகிறது. வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், முதன்முதலாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் வகையில் சிறப்பு முகாம்களையும் அமைத்துள்ளது.

இந்த நிலையில்,  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்காளர்களுக்கு தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதில் வாக்காளர் தகவல் சீட்டு வழக்ங்கப்படும் என்றும்,  அதில், வாக்கு சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும்,  வாக்காளர் புகைப்படம் இடம்பெறாது எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,

ஆதார் கார்டு,

பான் கார்டு,

ஓட்டுநர் உரிமை,

பாஸ்போர்ட்,

வங்கி கணக்கு,

ஓய்வூதியம் கணக்கு,

மருத்துவ காப்பீடு கணக்கு,

100 நாள் வேலை அட்டை உள்பட 11 அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்டுதான் வாக்களிக்க முடியும்  என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால், வாக்காளர் தகவல் சீட்டை ஆதாரமாக கொண்டு வாக்களிக்க முடியாது என்றும்  என கூறப்பட்டுள்ளது.