டெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 11ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே நடைபெற்ற 10வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த சமரச முடிவும் எட்டப்படவில்லை. இந் நிலையில், இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் விவசாய சங்க பிரதிநிதிகளும், மத்திய அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லி விஞ்ஞான் பவனில் 4 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியிருந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் விவசாய சட்டங்கள் தொடர்பான பிரச்னையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து  டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள்  உறுதியாக தெரிவித்துள்ளனர்.