துபாய்: ஐக்கிய அரபு அமீரக நகரான துபாயில் நடந்த பேருந்து விபத்தில் இறந்த 17 பேரில் 12 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்தோரில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் மரணமடைந்தவர்களின் உறவினர்களிடம் தொடர்பு கொண்டுள்ளதாகவும், பிறரைக் குறித்த தகவல்களுக்காக காத்திருப்பதாகவும் இந்திய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த இந்தியர்களில் ராஜகோபாலன், ஃபெரோஸ்கான் பதான், ரேஷ்மா ஃபெரோஸ் கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்காவீட்டில், கிரண் ஜானி, வாசுதேவ் மற்றும் திலக்ராம் ஜவஹர் தாகூர் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்த துணைத் தூதர், தேவையான உதவிகளை அளிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், லேசான காயமடைந்த 4 இந்தியர்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மெட்ரோ நிலையத்திற்கு அருகே சிக்னலை மீறிச் சென்ற பேருந்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.