சென்னை:

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், ஊரடங்கை மீறி வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 1,24,657 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வீட்டில் ஒருவர் மட்டுமே  முகக்கவசம் அணிந்து வெளியே வரலாம் என மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

ஆனால், அரசின் உத்தரவை காதில் ஏற்றிக்கொள்ளாமல், ஜாலியாக ஊர் சுற்றும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அவர்களை காவல்துறையினர் மடக்கி கைது செய்து சொந்த ஜாமினில் விடுதலை செய்து வருகின்றனர்.

ஊரடங்கை மீறியதாக தமிழகத்தில் இதுவரை 1,24,657 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும்,  1,14,832 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

ஊரடங்கை மீறிய குற்றத்திற்காக  97,146 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ரூ. 38,54,144 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும்  தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது.