புதுக்கோட்டை:

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 13 வயது சிறுமி கொலையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தனது மகளை தந்தையே, பெண் மந்திரவாதியுடன் இணைந்து கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரது மகள் வித்யா (வயது 13) 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த மாதம் 18–ந் தேதி வித்யா பிடாரி கோவில் குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதையடுத்து, அவரை அந்த பகுதியினர் தேடி வந்த நிலையில், பாப்பான்குளம் அருகே தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வித்யா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு,  தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை மறுநாள்  வித்யா உயிரிழந்தாள்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது.

இதனால், சிறுமி கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியான நிலையில்,  புதுக்கோட்டை எஸ்பிஐ அருண் சரத்குமார் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இது தொடர்பாக சிறுமி வித்யாவின் தந்தை பன்னீர்செல்வத்தை பிடித்து போலீசார் தீவிரமாக  விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல் வெளியானது.  மகளை பலியிட்டால், ஏராளமான பணம் கிடைக்கும் என்று  பெண் மந்திரவாதி ஒருவர்8  சொன்னதை கேட்டு மூட நம்பிக்கையின் அடிப்படையில் தனது உறவினர் குமாருடன் சேர்ந்து மகளை நரபலி கொடுத்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம், உறவினர் குமார் மற்றும் பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.