சேலம்:

சேலம் மாவட்டத்தில் 1300 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் வீரனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வீரராகவன், ஆறகழூர் பொன் வெங்கடேசன் ஆகியோர் சேலம் மாவட்டம்அடங்கிய குழுவினர் சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தம் அருகே உள்ள ஓலக்கோடு என்ற இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது ஆரிராசன் காடு என்ற தனியார் எஸ்டேட்டில் 1300 வருடங்களுக்கு முற்பட்ட நடுகல் ஒன்றைக் கண்டெடுத்தனர்.

ஆதிகால மனிதனுக்கு ஆநிரைகளைக் காத்தலும், அவற்றைக் கவர்தலும் முக்கியத் தொழிலாக இருந்தது.  ஆநிரைகளைக் கவர்தல் வெட்சித் திணை என்றும்  அவற்றை மீட்பது கரந்தைத் திணை என்றும் புறத்திணைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் ஆநிரைகள் தொடர்பாக எழும் போரைப் பூசல் என்று சுட்டுகிறது.  மக்கள் கால்நடைகளைப் பெரும் சொத்தாகக் கருதி காவல் காத்து வந்தனர். அவற்றைக் கவரவருவோருக்கும் காப்பவருக்கும்  ஏற்படும் சண்டையில் இறக்கும் வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

அப்படி ஆநிரைகளைக் காத்த வீரனின் நடுகல்தான் தற்போது கிடைத்துள்ளது. இந்த நடுகல்லானது ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக வெட்டப்பட்டு இருக்கிறது.  100 செ.மீ உயரமும், 30 செ.மீ அகலமும் இருக்கிறது.  இடது பக்கம் திரும்பிய நிலையில் முகம், வலது கையில் குறுவாள், இடது கையில் நீண்ட வில்லுடன் துவிபங்க நிலையில் வீரன் காணக்கிடைக்கிறார். யில் காப்பு, இடையில் அரையாடை, பாதங்கள் இரண்டும் இடது பக்கம் திரும்பிப் போருக்கு விரைந்து செல்லும் நிலையில் வீரனது உருவம் உள்ளது.  வீரனுக்கு மேல் புறமும், இடது புறமும் வட்டெழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.   இவை ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டு என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 வரிகளில் எழுத்துகள் உள்ளன. தமிழகத் தொல்லியல் துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றிய முனைவர் ர.பூங்குன்றன், கல்வெட்டு ஆய்வாளர் கோவை து.சுந்தரம் ஆகியோர் மூலம் கல்வெட்டானது படிக்கப்பட்டது.

ரிவலிகையார் எனக் கல்வெட்டு ஆரம்பிக்கிறது.  மன்னர் பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 7 ம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் இந்தப் பகுதியானது சுதந்திரமாகச் செயல்பட்டதை இந்தக் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. தகினூர் என்ற ஊர் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. ஆயளூர் என்ற ஊரைச் சேர்ந்த வீரன் ஒருவன் ஆநிரைக் கூட்டத்தை கவர வந்தவர்களுடன் போரிட்டு உயிர் இழந்துள்ள செய்தியை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது.