சென்னை:
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் மற்றும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு வருவோரை 14 நாட்கள் தனிமைப்படுத்த தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 161 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி தமிழகத்தில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த 6 நாட்களில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் 14 நாட்கள் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்,  அவர்கள் வீட்டில்  தனிமைப்படுத்தப்படுவதற்கான ஸ்டிக்கரை வீடுகளில் ஒட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைச்செயலாளர் சண்முகமும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில்,  ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு வருவோரை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத் தப்படுவதற்கான ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.