சென்னை: தமிழகம் முழுவதும் நாளை 144 தடை உத்தரவு அமல்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது கொரோனா வைரஸ். சீனாவை தொடர்ந்து, ஈரான், இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா ஆகிய நாடுகளில் பலி எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ந்தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டது. கொரோனா பற்றிய அறிவுறுத்தலை மீறி மக்கள் வெளியே நடமாடுவதால் இந்த அறிவிப்பு வெளியானது.

இதனை முன்னிட்டு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் அமலுக்கு வருகின்றன. அதுதொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: 144 தடை உத்தரவால் பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தடையிருக்காது. வங்கிகள், ஏடிஎம்கள் வழக்கம்போல் செயல்படும்.

மருந்து உற்பத்தி, விநியோகம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். ஆம்புலன்ஸ், விமான நிலையம், மருத்துவமனை செல்லும் டாக்சி, இறுதிச்சடங்கு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

ஓட்டல்களில் பார்சல் வாங்க அனுமதியுண்டு.  ஆனால் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. அனைத்து கல்லூரி, வேலைவாய்ப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படுகின்றன.

ஊழியர்களை அலுவலகம் அழைத்து செல்லவும், பின்னர் பணி முடிந்து வீட்டுக்கு அழைத்து செல்லவும் உதவும் பொதுபோக்குவரத்து வாகனங்கள்  இயங்க அனுமதி வழங்கப்படும். அத்யாவசிய சேவைகள், அரசு பணிகளுக்கு மட்டும் அரசு வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.

கடந்த 16ந்தேதிக்கு முன் திட்டமிடப்பட்ட திருமணங்கள் மட்டுமே, மண்டபங்களில் நடக்க வேண்டும்.  திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 30 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்படும். ஆவின் பால் விற்பனையகங்கள், அம்மா உணவகங்கள் செயல்படும்.

அத்யாவசிய கட்டிட பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப துறை பணியாளர்கள் அவரவர் வீடுகளில் இருந்தே பணியாற்ற வேண்டும். பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி ஆகியவை இயங்காது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் அமலில் இருக்கும்.  இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அந்த  அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.