டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணி தீவிரமடைந்து வரும் நிலையில் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் தடுப்புகளை மீறி டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்த நிலையில் அவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போலீசார் கலைக்க முயன்றனர். ஆகையால் டெல்லி எல்லை வன்முறைகளமாக காட்சியளிக்க செங்கோட்டையைக் கைப்பற்றிய விவசாயிகள் அங்கு விவசாய சங்கக் கொடி ஏற்றினர்.

போராட்டத்தின் தீவிரத்தை தடுக்க முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதோடு, இணையதள சேவைகள் முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இல்லம், நாடாளுமன்ற வளாகம், பிரதமர் இல்லம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது