புதுச்சேரி:
புதுச்சேரியில் இன்று  மேலும் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 9 மாத ஆண் குழந்தை கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

புதுச்சேரியில் அதிகபட்சமாக 1,079 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  இதில் தற்போது 147 பேருக்கு (13.6 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், 68 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 60 பேர் ஜிப்மரிலும், 12 பேர் காரைக்காலிலும், 7 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 மாத ஆண் குழந்தை கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 14 ஆம் தேதி காலை அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து வயிற்றுப்போக்கு தீவிரமாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 15) உயிரிழந்தது. அந்தக் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 379 பேர், ஜிப்மரில் 177 பேர், கோவிட் கேர் சென்டரில் 117 பேர், காரைக்காலில் 67 பேர், ஏனாமில் 33 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 774 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 30 பேர், ஜிப்மரில் 14 பேர், கோவிட் கேர் சென்டரில் 13 பேர், ஏனாமில் ஒருவர் என 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 947 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 27 ஆயிரத்து 916 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் 25 ஆயிரத்து 907 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று வந்துள்ளது.
இன்னும் 270 பரிசோதனைகள்  முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன”
இவ்வாறு அவர் கூறினார்.