இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் 15 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகாலை இஸ்லாமாபாத்தில் இருந்து கராச்சி நோக்கி க்வெட்டா – கராச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கடும் பனிமூட்டம் காரணமாக, நிலைதடுமாறிய அந்த பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் 5 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 15 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனயில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. விபத்தின் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.