சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் நாளை 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்க உள்ளனர். தலைமை நீதிபதி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதி  பணியிடங்கள் எண்ணிக்கை 60 ஆக இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  ஆனால் தற்போது  39 நீதிபதிகள் தான் உள்ளனர்.
chennai-high-court-1
இதையடுத்து, காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் நியமிக்க 19 வக்கீல்கள், 11 மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது.
இந்த பட்டியல் உச்ச நீதிமன்ற  நீதிபதிகளின் ஆய்வு, மத்திய சட்டத்துறையின் ஆய்வுக்குப்பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து, முதல்கட்டமாக 15 பேரின் பெயர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
வழக்கறிஞர்கள்  வி.பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியன்,  எம்.கோவிந்தராஜ், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், ஜெ.நிஷாபானு, எம்.எஸ்.ரமேஷ், எஸ்.எம்.சுப்பிரமணியம், டாக்டர் அனிதா சுமந்த்,
மாவட்ட நீதிபதிகள் பஷீர் அகமது,  டி.ரவீந்திரன், எஸ்.பாஸ்கரன், பி.வேல்முருகன், ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் ஆகிய 15 பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள்  நாளை பதவியேற்கின்றனர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இந்த 15 புதிய நீதிபதிகளுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.