போலீசாரை கொன்ற ரவுடி வீட்டில் 16 சி.சி.டி.வி.காமெராக்கள்..

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்கு  கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் துபே என்ற ரவுடியை பிடிக்கச் சென்ற 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தில் ரவுடி துபேயின் கூட்டத்தைச் சேர்ந்த 60 ரவுடிகள் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

துபேயை பிடிக்க 25 படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், துக்ரு கிராமத்தில் உள்ள அவனது ஆடம்பர பங்களாவை போலீசார் நேற்று இடித்து தரை மட்டமாக்கினர்.

அவனுக்குச்  சொந்தமான இரண்டு கார்கள், 2 டிராக்டர்களும் புல்டோசரால் உருத்தெரியாமல் நசுக்கப்பட்டன.

அந்த பங்களாவில் ரகசிய பதுங்கு குழி இருந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

பங்களாவின் உள்ளேயும், வெளியேயும் 16 சி.சி.டி.வி. காமெராக்களை நிறுவி,  சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் நடமாட்டத்தை அவன் கண்காணித்து வந்துள்ளான்.

இதனிடையே, அவனைப் பிடிக்கச் சென்ற குழுவில் இடம் பெற்றிருந்த வினய் திவாரி என்ற காவலர் மீது போலீசாருக்கு. சந்தேகம் எழுந்துள்ளது.

மற்ற போலீசார், ரவுடிக்கும்பலை பிடிக்கப் போராடிக்கொண்டிருந்தபோது, அவர்  மட்டும் சம்பவத்தை வேடிக்கை  பார்த்தபடி நின்றுள்ளார்.

ஒரு முறை கூட அவர் துப்பாக்கியால் சுடவில்லை. தவிர, சம்பவ இடத்தில் இருந்து அவர் தப்பி ஓடி விட்டார்.அவரை சிறப்பு போலீஸ் படையினர், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரித்து வருகிறார்கள்.

-பா.பாரதி.