சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஆண்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக  போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறியுள்ளார்

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிகளுக்காக ஜனவரி 11 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பபடும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வரும் 11, 12, 13ந்தேதிகளில்  16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 10228 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சென்னை தவிர பிற ஊர்களில் இருந்து 5993 பேருந்துகள் இயக்கப்படும் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தெரிவித்தவர்,  17,18, 19 ஆம் தேதிகளிலும்,  15,270 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

சிறப்பு பேருந்துகளுக்கு ம் 9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும்  சென்னையில்  6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா செல்லும் சிறப்பு பேருந்து‌கள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில்‌ இருந்தும், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும்.

மேலும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகளும், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என கூறியுள்ளார்.