நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனோ தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெல்லை மாவட்டத்திலும்  கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்திருப்பதால், அங்கு தங்கி பணி செய்து வரும் வெளிமாநில பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆர்வம் காட்டி வருகிறார்கள். குடும்பத்துடன் தங்கியிருந்த பலர் வீடுகளைக் காலி செய்து விட்டுச் சென்று விட்டனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரியில் இஸ்ரோ மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் திரவ இயக்க உந்தும வளாகம், நிறுவனங்கள், காற்றாலைகள் ஆகியவற்றில் 20,000க்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.

இந் நிலையில், இன்று கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேரும் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகத்தில் பணியாற்றும் 132 பேரும் அடங்குவர். காவல்கிணறு பகுதியில்  தனியார் நிறுவன பணியாளர்கள் 99 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.