சென்ன‍ை: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரத்துசெய்வதற்கான நடிவக்கையை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது என்று தொடர்புடைய துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதில், பாடவாரியாக ஆசிரியர்களின்றி உபரி என கண்டறியப்பட்ட இடங்களை பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்குமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

அனைத்து அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளிலும் இதற்கான பட்டியலை பெற்று இயக்குனரகத்துக்கு அனுப்பவேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்மூலமாக பெறப்பட்ட உபரி பணியிடங்களை, எதிர்காலத்தில் காலியிடங்களாகவோ அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருதக்கூடாது. சரண்டர் செய்யப்பட்ட இடங்களை பள்ளிகளின் பதிவேடுகளில் பொது தொகுப்புக்கு சரண்டர் செய்யப்பட்டது என குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், மொத்தம் 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரத்துசெய்வதற்கான நடவடிக்கையை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது.

தமிழ் 308, ஆங்கிலம் 144, கணிதம் 289, அறிவியல் 457, சமூக அறிவியல் 371 மற்றும் பிற இடங்கள் 137 என ஆசிரியர் பணியிடங்கள் ரத்தாகவுள்ளன. இந்த இடங்கள், தேவைப்படுகின்ற பள்ளிகளுக்கு தேவையான பாடங்களுக்கு மாற்றப்பட உள்ளன.