சென்னை:

பொதுமக்களின் உயிர்க் காப்பீடு திட்டங்களான எல்ஐசி போன்ற இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு 18% ஜிஎஸ்டி வரி வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?  என்று கேள்வி விடுத்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஜிஎஸ்டி வரியை உடனேரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 1956 ஆம் ஆண்டில் ரூபாய் 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டு இன்றைக்கு ரூபாய் 30 லட்சம் கோடி முதலீடு உள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது. தேசியமயமாக்கப்பட்ட போது மொத்த ஆயுள் நிதி ரூபாய் 440 கோடியாக இருந்தது, இன்று ரூபாய் 31 லட்சத்து 11 ஆயிரம் கோடியாக 63 ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது. அதேபோல, 55 லட்சமாக இருந்த பாலிசிதாரர்களின் எண்ணிக்கை இன்று 30 கோடியாக உயர்ந்துள்ளது.

பொதுவாக, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பொதுமக்களால் நம்பிக்கையோடு செய்யப்படுகிற முதலீடுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி செய்து வருகின்றன. இதுவரை ரூபாய் 18 லட்சத்து 79 ஆயிரம் கோடி மத்திய – மாநில அரசுகளின் பத்திரங்களிலும், வீடுகட்டுகிற திட்டங்களுக்கு ரூபாய் 54 ஆயிரத்து 255 கோடியும், மின் திட்டங்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி என மொத்தம் கட்டமைப்பு வசதிகளுக்காக ரூபாய் 21 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீட்டிற்கு உதவி செய்திருக்கின்றன.

இதேபோல, ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திற்கும் லட்சக்கணக்கான கோடி ரூபாயை நிதியாக உதவி வருகின்றன. இந்திய மக்களின் வாழ்வாதாரத்தோடு சம்மந்தப்பட்ட, இந்தியாவின் வளர்ச்சியில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்ட இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் கடுமையான சோதனைக்கு உள்ளாகி வருகிறது. பாலிசிதாரர்களின் பிரீமிய தொகை மீது முதலில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

பிறகு, மத்திய பாஜக ஆட்சியில் தற்போது பிரீமியத் தொகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. உயிர்க் காப்பீட்டுத் திட்டங்களுக்காக பொதுமக்கள் செய்கிற முதலீட்டிற்கான பிரீமியத் தொகை மீது ஜிஎஸ்டி வரி விதிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை மத்திய அரசு தான் விளக்க வேண்டும்.

அதேநேரத்தில், தங்கத்திற்கு 3 சதவீதம், வைரத்திற்கு 0.25 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கிற மத்திய அரசு, தங்களது உயிருக்கு உத்தரவாதம் தருகிற வகையில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முதலீடு செய்யப்படுகிற தொகைகளுக்கான பிரீமியத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாலிசிதாரர்களின் முதலீடு குறைந்து ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே, எவ்வித நியாயமும் இல்லாமல் பொதுமக்களின் உயிர்க் காப்பீடு திட்டங்களின் அடிப்படையில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் செய்யப்படுகிற முதலீட்டுக்கான பிரீமியத்திற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்,” என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.