சென்னை:

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில், மே மாதம் 7ந்தேதி தீர்ப்பு வெளியாகும் என உயர்நீதி மன்ற வட்டார தகவல்கள் கூறுகின்றன.

அதே வேளையில் மே 1ந்தேதி முதல் ஜூன் 3ந்தேதி வரை 34 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பு வெளியாகுமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து இரண்டாக பிரிந்த அதிமுக, பின்னர் ஓபிஎஸ்-ன் நிபந்தனைகளை ஏற்று ஒன்றானது. அதையடுத்து, சசிகலா தரப்பினர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர். இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக  அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் கட்சி விதியை மீறி  கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அவர்களை கட்சி கொறடா உத்தரவின்பேரில் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவு வழங்கினார்.

இதனை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல்  விசாரணை நடந்து வருகிறது. இறுதி விசாரணை கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. அப்போது அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து  உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்று ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், மற்றும் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் தொடர்பான வழக்கில், சட்டமன்ற சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் மீதான வழக்கிலும் விரைவில் தீர்ப்பு கூறப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வரும் மே 7ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக உயர்நீதி மன்ற வட்டார உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வரும் 1ந்தேதி முதல் உயர்நீதி மன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், தீர்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கிடையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்எல்ஏக்களின் சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.