பிஷப் பாலியல் தொல்லை : மடத்தை விட்டு ஓடிய 18 கன்னியாஸ்திரிகள்
திருவனந்தபுரம்
ஜலந்தர் மாநில ஆர்ச் பிஷப் கேரளாவில் இருந்த போது அளித்த பாலியல் தொல்லையால் 18 கன்னியாஸ்திரிகள் மடத்தை விட்டு சென்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட ஆர்ச் பிஷப் பிராங்கோ. இவர் மீது கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி பலாத்கார குற்றச்சாட்டை அளித்துள்ளார். இந்த பரபரப்பான புகாரை வைக்கம் காவல்துறை அதிகாரி சுபாஷ் விசாரித்து வருகிறார். இது குறித்து கன்னியாஸ்திரியின் உறவினர்களிடம் விசாரித்த போது பிராங்கோ தங்களையும் அவர் ஆதரவாளர்கள் மிரட்டியதாக தெரிவித்துள்ளனர்
புகார் அளித்த கன்னியாஸ்திரி, “ஆர்ச் பிஷப் பிராங்கோ என்னை 2014 முதல் 2016 வரை 13 முறை பலாத்காரம் செய்துள்ளார். எனக்கு கொலை மிரட்டல் விடுத்து மன ரீதியாக சித்திரவதை செய்து என்னை பலாத்காரம் செய்துள்ளர். நான் இந்த பிரச்னையை சபைக்குள்ளேயே தீர்க்க விரும்பினேன். ஆனால் அது நடக்காமல் சபையை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
நான் அதனால் காவல்துறையிடம் புகார் அளித்தேன். கேரள மாநிலம் கொச்சியில் சமீபத்தில் நடந்த பிஷப்புகள் மாநாட்டில் போப் ஆண்டவரின் பிரதிநிதி ஒருவர் கலந்துக் கொண்டார். இதே புகாரை அவரிடமும் நான் அளித்துள்ளேன். எனது தங்கை மற்றும் அவரது கணவர் ஆகியோர் குடும்பத்துடன் காலடியில் வசித்து வருகின்றனர். பிஷப்புக்கு ஆதரவான ஒரு பாதிரியார் அவர்கள் வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
என்னை மட்டும் அல்லாமல் பல கன்னியாஸ்திரிகளை பிஷப் பிராங்கோ பாலியல் கொடுமை செய்துள்ளார். பிராங்கோவின் பாலியல் கொடுமை தாளாமல் இதுவரை 18 கன்னியாஸ்திரிகள் மடத்தை விட்டு ஓடி விட்டனர். அதனால் இதுவரை 5 மடங்கள் மூடப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.
இந்த புதிய தகவல்கள் கேரள மக்களிடையே மேலும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. அத்துடன் விரைவில் பிஷப் பிராங்கோ கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.