டெல்லி: லாக் டவுனை மீறி, ஹரித்துவாரில் சிக்கி தவித்த1800 குஜராத் மக்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் விவரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மார்ச் 28ம் தேதி..! அகமதாபாத்தில் வசிக்கும் முகேஷ்குமார் என்பவரின் மொபைலில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. இந்த செய்தியை அவரது நண்பர் ஒருவர் அனுப்பியுள்ளார். அதில், இன்றிரவு உத்தரகண்ட் போக்குவரத்தின் பல பேருந்துகள் அகமதாபாத்தை அடைகின்றன. இந்த பேருந்துகள் நாளை காலை உத்தரகண்ட் திரும்பும், நீங்களும் உங்கள் வீட்டிற்கு திரும்பலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முகேஷ் உத்தரகண்ட்டைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளாக, அவர் அகமதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார். லாக்டவுன் காரணமாக ஹோட்டல் மூடப்பட்டபோது, ​​வேலைவாய்ப்பும் கேள்விக்குறியானது. நாடு முழுவதும் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் போலவே, முகேஷும் தனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார். ஆனால் போக்குவரத்து அனைத்தும் மூடப்பட்டதால் அவரால் செல்ல முடியவில்லை.

மார்ச் 28ம் தேதியன்று, திடீரென உத்தரகண்ட் போக்குவரத்து வாகனங்கள் அகமதாபாத்திற்கு வருவதாக ஒரு நண்பரின் செய்தி வந்தபோது,அதை முதலில் நம்பவில்லை. முகேஷ் தனது நண்பர் ஒரு செய்தியை அனுப்பி கேலி செய்திருக்கலாம் என்று உணர்ந்தார்.

நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரகண்ட் போக்குவரத்து பேருந்துகள் 1200 கி.மீ தூரத்தில் உள்ள அகமதாபாத்திற்கு எவ்வாறு வர முடியும்.? அதே நேரத்தில் அவர்களுக்கு உதவ உத்தரகண்ட் அரசு பேருந்துகளை அகமதாபாத்திற்கு அனுப்பியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அந்த நாளில் உத்தரகண்ட் மாநில அரசின் பல சொகுசு பேருந்துகள் தமது ஹோட்டலின் முன் பிரதான சாலையில் வரிசையாக அணிவகுத்து நிற்பதை முகேஷ்குமார் கண்டார். அவரது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனடியாக உத்தரகண்டிலிருந்து குடியேறிய தமது சக ஊழியர்களை தொடர்புகொண்டு தனது கிராமத்திற்கு திரும்புவதை பற்றி தெரிவித்தார்.

இது குறித்து முகேஷ்குமார் கூறி இருப்பதாவது: மறுநாள் காலை அதாவது மார்ச் 29 அன்று காலை 10 மணியளவில் நாங்கள் அனைவரும் இந்த பேருந்துகளுக்கு அருகில் வந்தோம். நாங்கள் மொத்தம் 13 பேர். எங்கள் பேருந்தின் ஓட்டுநர் எங்களிடம் ரிஷிகேஷ் வரை மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

நாங்கள் அதிர்ந்தோம். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் ஒப்புக் கொண்டோம்.  13 பேரும் சேர்ந்து உடனடியாக 18 ஆயிரம் ரூபாயை ஓட்டுநருக்கு கொடுத்தோம். இந்த சிக்கலான தருணத்தில் எப்படியாவது வீட்டுக்கு செல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் நாங்கள் அப்படி செய்தோம். ஆனால் அது கூட நடக்கவில்லை என்றார்.

குஜராத்தில் இருந்து திரும்பிய உத்தரகண்ட் மக்கள் பாதியிலேயே இறக்கி விடப்பட்டனர். இந்த பேருந்துகள் அனைத்தும் குஜராத்தில் சிக்கிய முகேஷ் போன்ற உத்தரகண்ட் குடிமக்களை அழைத்துச் செல்லவில்லை. மாறாக ஹரித்வாரில் சிக்கிய குஜராத் குடிமக்களை அகமதாபாத்திற்கு கொண்டு வந்து விட்டுவிட்டன.

இது குறித்து குஜராத் முதல்வரின் செயலாளர் அஸ்வானி குமார் கூறியதாவது: குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1800 பேர் ஹரித்வாரில் சிக்கித் தவித்தனர். மத்திய அமைச்சர் மன்சுக்பாய் மண்டவியா மற்றும் முதலமைச்சர் விஜய் ரூபானி ஆகியோரின் சிறப்பு முயற்சியால், இந்த மக்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அந்த ஏற்பாட்டின் காரணமாக, உத்தரகண்ட்டின் பல ரயில்கள் ஹரித்வாரில் இருந்து அகமதாபாத்தை அடைந்தன. இதில் ரொம்ப முக்கியமாக, இந்த வேலை மிகவும் ரகசியமாக செய்யப்பட்டது. உத்தரகண்ட் போக்குவரத்து அமைச்சருக்கு கூட தனது துறையின் பல ரயில்கள் 1200 கி.மீ தூரத்திற்கு பல மாநிலங்களின் எல்லைகளை கடந்து சென்றது தெரியவில்லை.

ஆனால்,  மார்ச் 27 அன்று வெளியிடப்பட்ட உத்தரவில், உத்தரகண்ட் போக்குவரத்தின் இந்த பேருந்துகள் முதலமைச்சர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின் கீழ் குஜராத்திற்கு நேரடியாக அனுப்பப்பட்டதை அப்பட்டமாக காட்டுகிறது. ஹரித்வாரில் சிக்கிய குஜராத் மக்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்து வருவதே அவர்களின் நோக்கம். ஆனால் உத்தரகண்ட் அரசாங்கத்தால் அத்தகைய உத்தரவு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த பேருந்துகள் ஹரித்வாரில் இருந்து புறப்படத் தொடங்கியதும், இந்த செய்தி பகிரங்கமானதும், பெரும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் மக்கள் சிக்கி தவிக்கும் போதும், பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உத்தரகண்டிலும் சிக்கித் தவிக்கும் போது, ​​குஜராத் மக்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்துகள் ஏன் இயக்கப்படுகின்றன என்ற கேள்விகள் இப்போது எழுந்தன.

அதே நேரத்தில் குஜராத் முதலமைச்சரின் செயலாளர் அஸ்வனி குமாரின் அறிக்கையிலிருந்து, நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இங்கும் அங்கும் சிக்கியுள்ள நிலையில், ஹரித்வாரில் சிக்கியுள்ள இந்த மக்கள் உள்துறை அமைச்சரின் தனிப்பட்ட தலையீட்டுக்கு பிறகு, சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வெளியேற்றப்பட்டனர் என்பதும் தெளிவாகிறது.