சென்னை: தலைநகர் சென்னையில் தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் அதிக மக்கள் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மொத்தம் 1,890 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டையில், மொத்தம் 522 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 341 பேர், தங்களின் 28 நாட்களை தனிமையில் கழித்துள்ளனர்.

8 லட்சம் பேர் இருக்கும் திருவிக நகரில் 88 பேர் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். இதே போன்று அடையாறில் 293 பேர் தங்களை தனிமைப் படுத்தி கொண்டுள்ளனர்.

எது எப்படி இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் இருந்து எந்த கொரோனா அறிகுறியும் இல்லை என்றும், வெறுமனே முன் எச்சரிக்கைக்காக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20 லட்சம் மக்கள் தொகை கொண்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் மொத்தம் 227 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வீட்டில் தனிமைப்படுத்துவது பயனற்றதாக இருக்கும் என்பது உண்மைதான். வட மாநிலங்களை போல வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை இங்கு குறைவு தான், எனவே, அங்கு இருப்பது போன்ற ஒரு நிலைமை இங்கு ஏற்பட வாய்ப்பில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.