விசாகபட்டினம்

விசாகபட்டினத்தில் உள்ள இஸ்கான் கோவிலில் பதுக்கப்பட்டிருந்த மாணவர்கள் மதிய உணவுக்கான 19.8 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாகபட்டினத்தில் சாகர்நகர் பகுதியில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரின் இஸ்கான் கோவிலின் மூலம் 67 அரசுப்பள்ளிகளில் பயிலும் 13000க்கும் அதிகமான மாணவர்களுக்கும் அரசு உதவி பெறும் 61 பள்ளிகளில் பயிலும் 1850 மாணவர்களுக்கும் இலவச மதிய உணவை அரசு வழங்கி வருகிறது.   இதற்கான அரசியை அரசு மற்றும் கோவில் பக்தர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.  இந்த அரிசி பதுக்கப்பட்டு முறைகேடாக விற்கப்படுவதாக ரகசியத் தகவல்கள் வந்துள்ளன.

இதையொட்டி புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குழு கோவில் வளாகத்தில் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.  அப்போது கோவிலில் உள்ளே ஒரு லாரியில் சுமார் 5.5 டன் எடை உள்ள 110 அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது.   இந்த அரிசியின் மதிப்பு ரூ.5.94 லட்சம் ஆகும்.  இது குறித்து லாரி உரிமையாளர் மற்றும் அவர் உதவியாளரிடம் விசாரித்த போது இவை மதிய உணவுக்கு அளிக்கப்பட்ட அரிசி எனவும் வேறு பைகளில் மாற்றப்பட்டு காக்கி நாடா எடுத்துச் செல்ல உள்ளதும் தெரிய வந்தது.

இந்த 110 மூட்டையைத் தவிர 286 மூட்டைகளும் லாரிகளில் ஏற்றி அனுப்பத் தயார் நிலையில் இருந்துள்ளன.  இந்த அரிசி உணவு பங்கீட்டுத் துறையில் இருந்து வந்த சாக்கு மூட்டைகளில் இருந்து வேறு ஒரு பிளாஸ்டிக் மூட்டையில் அடைக்கப்பட்டிருந்தன.  இந்த வளாகத்தில்  மொத்தம் இது போல் 19.8 டன் அரிசி வேறு இடங்களுக்கு மாற்ற வசதியாக வேறு மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.  இந்த அரிசி மூட்டைகள் மற்றும் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   பிளாஸ்டிக் மூட்டையில் காக்கிநாடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனப் பெயர் இருந்தது.

அதிகாரிகளின் விசாரணையில் இஸ்கான் மதிய உணவு வழங்கி வரும் பணியைச் செய்து வந்ததும் ஆனால் 2019 மார்ச் முதல் அரிசி இருப்பு குறித்து எவ்வித ஆவணமும் வைத்து இல்லாததும் தெரிய வந்துள்ளது.  உணவு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளும் 2019 பிப்ரவரிக்குப் பிறகு எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டு உணவு பங்கீட்டுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்கான் தரப்பினர் மறுத்துள்ளனர்.  இஸ்கான் தலைவர் சம்பா தாஸ், “பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மதிய உணவுக்காக அரசு வழங்கிய அரிசி கிடையாது.  அவை அனைத்தும் பக்தர்களால் கோவிலுக்கு வருவோருக்கு உணவு அளிக்க வழங்கப்பட்டதாகும். நாங்கள் அரிசி இருப்பு கணக்கைச் சரியாகப் பராமரித்து வருகிறோம். எங்கள் கோவிலுக்கு உள்ள ஆயுள் உறுப்பினர்கள் அளித்துள்ள அரிசியை நாங்கள் வேறு கோவில்களுக்கு மாற்ற உள்ள போது அதிகாரிகள்  அதைப் பறிமுதல் செய்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.