புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு அல்லது அதன் கண்ணியத்தை குறைக்கும் வகையில் நடத்தல் என்பதைத் தீர்மானிக்கும், கடந்த 1971ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 2(c)(i) இன் அரசியல் அமைப்பு நம்பகத்தன்மையை கேள்வியெழுப்பி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர் இந்துக் குழுமத்தின் என்.ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்.

இதுவொரு மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

இந்த சட்டத்தால், குறிப்பாக, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் சட்டப்பிரிவு 32ன் படி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ரிட் மனுவானது, மேற்கண்ட சட்டப்பிரிவின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்புவதோடு, அது பேச்சுரிமைக்கு எதிராக உள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

“1971ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 2(c)(i), அரசியல் அமைப்பிற்கு முரணாக இருப்பதுடன், அரசியல் சாசனம் முகப்புரையில் வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் மதிப்புகளுக்கு எதிரானதாக உள்ளது.

இது, சட்டப்பிரிவு 19(I) (a)க்கு எதிரானதாக உள்ளது மற்றும் தெளிவற்றதாகவும் உள்ளது மற்றும் தன்னிச்சையாக தீர்மானிக்கக்கூடியதாகவும் உள்ளது” என்று அந்த ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.