புதுடெல்லி: புகழ்பெற்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணிபுரியும் கணவன் – மனைவி இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், அந்த மருத்துவப் பெண்மணி 9 மாத கர்ப்பிணி என்ற அதிர்ச்சியும் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த இருவரும் வேறு எந்தப் பயணத்தையும் மேற்கொள்ளவில்லை என்ற விபரமும் தெரியவந்துள்ளது.

அந்த மருத்துவர் பணியின்போது நடந்த ஒரு பிரிவுபசார விழாவில் கலந்துகொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த மருத்துவர்களையும் சேர்த்து, மொத்தமாக டெல்லியின் 8 மருத்துவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பிசியாலஜி துறையைச் சேர்ந்த அந்த மருத்துவர், புதிய தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு, பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். அவரின் குடும்பமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிரேயுள்ள டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மற்றொரு மருத்துவர் சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனையைச் சேர்ந்தவர்.