சென்னை,
ழிப்பறி மற்றும் திருடப்படும் எலக்ட்ரானிக் பொருட்களை சாக்குமூட்டையில் கட்டி, ராஜஸ்தானில் விற்க முயன்ற மார்வாடி கைது செய்யப்பட்டார்.
சென்னையில் வழிப்பறி செய்யப்படும் திருட்டு செல்போன்களை ராஜஸ்தானில் விற்ற அடகுக் கடைக்காரர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் சாக்குமூட்டைகளில்  பதுக்கி வைத்திருந்த 2,240 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.
சென்னையில் கொள்ளையடிக்கப்படும் செல்போன், லேப்டாப், டேப்லட் போன்ற வற்றை மாதந்தோறும் ரயிலில் ராஜஸ்தானுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்துவந்த அடகுக்கடை உரிமையாளரான மார்வாடி  கைது செய்யப்பட்டார்.
phone1
தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, லேப்டாப் திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் தமிழக போலீசாரை குற்றம் சாட்டி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்களிடையே போலீசார் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை காவல்துறை கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையர் சங்கர், இணை ஆணையர் அன்பு மேற்பார்வையில் துணை ஆணையர் சுந்தரவடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, நீலாங்கரையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட லோகேஷ், அஜித் ஆகியோர் பிடிபட்டனர். விசாரணையில் பாலவாக்கம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவரும்  அவர்களது கூட்டாளி என்று தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட 3 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேலும்,  திருட்டு செல்போன்களை சித்தாலப் பாக்கம் மாம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள சந்தோஷ் அடகுக்கடையின் உரிமையாளரான ராஜஸ்தானை சேர்ந்த அனுமன்ராம் என மார்வாடியிடம் கொடுத்து பணம் பெற்றதாகவும் தெரிவித்தனர்.
போலீசார் அந்த மார்வாடியை கைது செய்து, அவரது கடையை அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 2 சாக்கு மூட்டைகள் நிறைய திருட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
phone2
சாக்கு மூட்டையை பிரித்து பார்த்போது, அதனுள்   2,240 செல்போன்கள், 1 லேப்டாப், 10 டேப்லட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து திருட்டுப் பொருட்களை வாங்கி விற்ற குற்றத்துக்காக அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பிரவீன் குமார் மீது 3 குற்ற வழக்குகள் உள்ளன. ஏற்கனவே 10 பேரிடம் செல்போன்களை பறித்துள்ளார். திருடப்படும் செல்போன்களை மார்வாடியிடம் கொடுத்து பணம் பெற்றுள்ளார்.
மார்வாடியும் இதுபோல் வழிப்பறி திருடர்கள் பலரிடமும் செல்போன், லேப்டாப், ஐபேட்களை குறைந்த பணம் கொடுத்து வாங்கியுள்ளார். பின்னர் இந்த திருட்டு பொருட்கள் அனைத்தையும் மாதந்தோறும் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு ரயிலில் கொண்டுசென்று அங்கு விற்பனை செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார்.
அசல் போன் போலவே போலி ரசீதுகளும் தயாரித்து விற்பனை செய்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இந்த திருட்டு செல்போன் வியாபாரம் நடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், அவருடன் தொடர்பு வைத்துள்ள வழிப்பறி கொள்ளையர்கள் யார்? இதுவரை எவ்வளவு திருட்டு பொருட்களை ராஜஸ்தானில் விற்றுள்ளார்? இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தனிப்படை போலீசார் கூறினர்.