டெல்லி: டெல்லி விவசாயிகளின் போராட்ட களத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, அரியானா எல்லையான சிங்கு எல்லையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி வட மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். 2 வாரங்களுக்கும் மேலாக எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க பல அடுக்கு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எல்லையில் பதற்றத்தை தணிக்கவும், சட்டம் ஒழுங்கு ஏற்படா வண்ணம் சமாளிக்கவும் கூடுதலாக மூத்த போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் உயரதிகாரிகளான கவுரவ்,  கன்ஷ்யம் பன்சால் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் வீட்டில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களின் உடல்நிலையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.