லாகூர் :

பாகிஸ்தான் மாநிலம் லாகூரை சேர்ந்த அசார் அப்பாஸ் என்ற ஏ.சி. மெக்கானிக், லாகூர் உயர்நீதி மன்றத்தில், ஒரு விநோத வழக்கை தொடர்ந்தார்.

“கொரோனா என்ற வைரஸ் பொய்யானது. அப்படி ஒரு வைரஸ் உலகத்திலேயே இல்லை. கை கொடுப்பதால் இந்த வைரஸ் பரவுவதாக சொல்லப்படுவது உண்மை அல்ல” என அப்பாஸ் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “கொரோனா தொற்று இல்லை என்பதற்கு மருத்துவ சான்று ஏதும் வைத்துள்ளீர்களா ?” என நீதிபதி வினா எழுப்பினார்.

“முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் செய்யும் சதியே கொரோனா. இல்லாத நோய்க்கு மருந்து எதற்கு ? எனவே வெளிநாட்டில் இருந்து கொரோனா தடுப்பு மருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும்” என அப்பாஸ் விடாப்பிடியாக கூறிகொண்டே இருந்தார்.

கொரோனா இல்லை என்பதற்கு சான்று எதையும் அளிக்கவில்லை.
இதனால் கோபம் அடைந்த நீதிபதி, அப்பாஸ் மனுவை தள்ளுபடி செய்தார்.

அவருக்கு 2 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, இனிமேல் இதுபோல் மேம்போக்கான வழக்குகளை தொடரக்கூடாது என அவருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

– பா. பாரதி