திருவனந்தபுரம்: ஸ்வப்னாவிடமிருந்து  கடத்தல் தங்கம் வாங்கிய  நகைக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளா அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தி இருப்பது தங்கக்கடத்தல் விவகாரம். கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சமீபத்தில் பெங்களூருவில் பிடிபட்டார்.
இந்த தங்கக் கடத்தல் வழக்கில் கேரளா தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடத்தலுக்கு முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு உண்டு என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும்.
ஆகையால் அவரது அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந் நிலையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னாவிடமிருந்து நகைக் கடையினர் கடத்தல் தங்கம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.‘
இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் கேரள மாநில போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.