மதுரை:மதுரையில் இன்றுடன் முடிய இருந்த முழு ஊரடங்கு ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை  மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மதுரையில் மேலும் 320 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  6,077 ஆக அதிகரித்துள்ளது.
மதுரையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே அமலில் இருந்த முழு ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. இந் நிலையில் இந்த முழு பொது முடக்கமானது, மேலும் 2 நாட்கள் (ஜூலை 14)  நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு பகுதிகளிலும், திருப்பரங்குன்றம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூலை 14 நள்ளிரவு வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.