சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 2  இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள  நிலையில், அதில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவுடன் மமக நடத்திய 2வது கட்ட பேச்சுவார்த்தையின்போது  தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் மார்ச் 1ந்தேதி திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.

இதைத்தொடர்ந்து, செய்தியளார்களிடம் பேசிய மமகட்சித்தலைவர் ஜவாஹிருல்லா,  திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடும். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும், எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் பின்னர் முடிவு செய்யப்படும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று, அதுகுறித்து திமுக தலைமையின் ஆலோசனை நடத்தியது. அதையடுத்து, ஒரு தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.