சென்னை:

மிழக சுகாதாரத்துறையில் இரண்டு திருநங்கைகளுக்கு பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பணியிட உத்தரவு வழங்கினார்.

ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைக்கு அரசுமருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழக சுகாதாரத் துறையில்   லேப் டெக்னீஷியன் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு  2 திருநங்கைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மூன்றாம் பாலினர் நலனிற்காக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மூன்றாம் பாலினர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவது, அரசுநலத் திட்டங்களை அவர்கள் பெறுவதற்கு ஏதுவாக மூன்றாம் பாலினர் நலவாரியம் அமைத்தது, அரசு வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வார்டு மேலாளராக பணியாற்றி வரும் எஸ்.நேயா மற்றும் எம்.பி.செல்வி சந்தோசம் ஆகிய இரண்டு மூன்றாம் பாலினர்களும், அவர்களை முறையான பணியிடத்தில் நியமனம் செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

எஸ்.நேயா, நுண்ணுயிரியல் படிப்பில் முதுகலை பட்டமும், எம்.பி.செல்வி சந்தோசம், இயன்முறை சிகிச்சையில் பட்டயமும் பெற்றுள்ளனர்.

இவர்கள் அதிக கல்வித் தகுதி பெற்று இருந்தும் வயது வரம்பை கடந்து விட்டதால், அரசு இவர்களின் கோரிக்கையை சிறப்பு நேர்வாக ஏற்று, அரசு மருத்துவமனைகளில் அவர்களை முறையே ஆய்வக நுட்புனர் நிலை II மற்றும் இயன்முறை சிகிச்சையாளர் நிலைII ஆகிய பணி இடங்களில் முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் செய்து, அதற்கான பணிநியமன ஆணைகளை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று எஸ்.நேயா மற்றும் எம்.பி.செல்வி சந்தோசம் ஆகிய மூன்றாம் பாலினர் இருவருக்கும் வழங்கினார் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது தமிழக சுகதாரத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.