கவுகாத்தி: அசாம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசாமில் 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இந் நிலையில் தெற்கு அசாமில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

அதன் காரணமாக வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேர் நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்துள்ளனர்.  வடகிழக்கு மாநிலமான அசாமில் வெள்ள பாதிப்பால் 3.5 லட்சம் மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோல்பாரா மாவட்டம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, நாகான் மற்றும் ஹோஜாய் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலத்தில் இதுவரை வெள்ளத்தால் 6 பேர் வரை பலியாகி உள்ளனர். 348 கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.  27,000 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலச்சரிவுகளைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அசாம் முதலமைச்சர் சோனோவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த மீட்புக்குழுவினர், துரித நடவடிக்கைகளில் இறங்கினர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.