டெல்லி: நாடு முழுவதும் ஜூன் 1 முதல்  ஏசி அல்லாத 200 ரயில்களை இயக்க உள்ளதாக அமைச்சர் பியூஸ் கோயல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
அதில் உள்ள கட்டுப்பாடுகள் பலவற்றை தளர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் 1  முதல் இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தமது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

வெளிமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்ல இந்த ரயில்கள்  முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பார்க்கப்படுகின்றது.
ஏ.சி இல்லாத இந்த ரயிலுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும்.  வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும். அதற்கான அட்டவணை இன்னும் ஒரு சில நாட்களில் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.