சென்னை:

நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எஸ்பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் மற்றும் அனைத்துதுறை செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதலமைச்சர், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வருவதாகக் கூறினார். பொதுமக்கள் தங்குதடையின்றி பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், நோய் எவ்வாறு பரவுகிறது என்பதை கண்டறிய முடியாமல் போகும் நிலை ஏற்படும் என்றார்.

மேலும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பை தொடரும்படி அறிவுறுத்திய முதலமைச்சர், மருத்துவர், செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.