டெல்லி:

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் 2 பேர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுக்கள் மீண்டும் தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக அவர்கள் தூக்கில் ஏற்றப்படுவது உறுதியாகி உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு, 23-வயதான மருத்துவக் கல்லூரி மாணவி டெல்லியில் இரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே  தூக்கி வீசப்பட்டார்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 2012ம் ஆண்டு  டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.

இது தொடர்பான வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,  குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங்  2013-ம் ஆண்டு மார்ச் 11ந்தேதி  திகார் சிறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு குற்றவாளியான , இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற  குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றவாளிகள் தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல மனுக்கள் தாக்கல் செய்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.  இந்த நிலையில்,  குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் கடந்த 7ந்தேதி மீண்டும் தீர்ப்பு வழங்கியது. அதன்படி 7ந்தேதி  அன்று காலை 7 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றவும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த குற்றவாளிகள் வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர், தங்களது தண்டனைக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில்  மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று  நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்றது. மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதனால் குற்றவாளிகள் வரும் 22-ம் தேதி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது.

மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி வரவேற்றுள்ளார்.  ‘இது எனக்கு ஒரு சிறப்பான நாள். கடந்த 7 ஆண்டுகளாக போராடி வந்தேன். குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் ஜனவரி 22 ஆம் தேதி எனக்கு மிகச்சிறப்பான நாளாக இருக்கும்’ என அவர் கூறி உள்ளார்.