2019ம் ஆண்டின் முதல் கூட்டம்: ஜனவரி 2ந்தேதி தமிழக சட்டசபை கூடுகிறது
சென்னை:
தமிழக சட்டப்பேரவை ஜனவரி 2ம் தேதி கூடுவதாக தமிழக சட்டமன்ற செயலாளர் அறிவித்து உள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம் கடந்த 6ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சட்டமன்றம் முடித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் சட்டமன்ற கூட்டம் 2019ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.‘ ஆண்டின் முதல் கூட தொடர் என்பதால் ஆளுநரின் உரையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட தொடரின் ஆளுநரின் உரையும் அதன் மீதான விவாதங்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பரபரப்பான அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்தி உள்ள கஜா புயல் மற்றும் நிவாரண பணிகள், மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ள விவகாரம், சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு போன்றவை குறித்து விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.