தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காட்டிநாயக்கன்தொட்டியில் 21 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91,975 பதவிகளை நிரப்புவதற்காக இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 27ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகளும், டிசம்பர் 30ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகின. இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரி ஒன்றியத்துக்குட்பட்ட காட்டிநாயக்கன்தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேட்சியாக போட்டியிட்ட 21 வயதுடைய கல்லூரி மாணவியான சந்தியாராணி, 210 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளார். சந்தியாராணிக்கு மொத்தம் 1,170 வாக்குகள் பதிவாகியிருந்தது.