download
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., போன்றவற்றில் சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு வரும், 22ல் நடக்க இருக்கிறது.
ஐ.ஐ.டி., — என்.ஐ.டி., – – ஐ.ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில்  பி.இ., – – பி.டெக்., படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம்.  இந்த ஆண்டுக்கான, ஜே.இ.இ., முதன்மை தேர்வு,  இந்தியா முழுவதும், ஏப்ரல், 3ல் எழுத்துத் தேர்வாகவும்; ஏப்ரல், 9, 10ல், ‘ஆன்லைன்’ வழியிலும் நடந்து முடிந்தது.  இதில், 10 லட்சம்  மாணவர்கள் பங்கேற்றார்கள்.
தமிழகத்தில், 7,000  மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதற்கான முடிவுகள், ஏப்ரல், 26ல் வெளியானது.  மொத்தம், 360 மதிப்பெண்களில், குறைந்தபட்ச, ‘கட் ஆப்’ மதிப்பெண், 100 என்று, அறிவிக்கப்பட்டது.
பொதுப் பிரிவில், 100; இதர பிற்படுத்தப்பட்டோரில், 70; தலித் இனத்தவரில், 52; பழங்குடியின மாணவர்களில், 48 என, ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்றவர்கள், இரண்டாம் கட்ட ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான்,  23 ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் இந்திய கனிம கல்வி நிறுவனமான, ஐ.எஸ்.எம்., ஆகியவற்றில், பி.இ., – பி.டெக்., படிக்க  சேர முடியும்.
இந்த ஆண்டு, அட்வான்ஸ்டு தேர்வை, இரண்டு லட்சம் பேர் எழுத  இருக்கிறார்கள்.
மே, 22ம் தேதி காலை மற்றும் மாலையில், இரண்டு தாள்களுக்கு தேர்வுகள் நடக்க இருக்கின்றன.
இந்த தேர்வில் கலந்துகொள்ள சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன:
‘மொபைல் போன், ஐ பேட், ஸ்மார்ட் போன், கால்குலேட்டர், டேப், வாட்ச், அபாகஸ்’ மற்றும் வாய்ப்பாடு அட்டவணை உட்பட, எதையும் எடுத்து வரக்கூடாது.
பெண்கள் காதணிகள், மூக்குத்தி, , பிரேஸ்லெட் போன்ற நகைகளை அணிந்து வரக்கூடாது.
பெரிய அளவில் பொத்தான் உடைய ஆடைகளை அணியக் கூடாது
பால் பாய்ன்ட் பேனா, ஒரிஜினல் அடையாள அட்டை மற்றும், ‘ஹால் டிக்கெட்’ போன்றவற்றை மட்டுமே எடுத்து வர வேண்டும்