சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் சென்னையில்  25,415 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியின் தீவிர நடவடிக்கை காரணமாக,  தடுப்பூசி செலுத்தும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுக்க கொரோனா பரவலை கட்டுப்படுத்த  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பல பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்விளைவாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் நேற்று ஒரே நாளில் 25,415 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

22.04.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 12,68,289 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.