சென்னை

சிறைக் கைதிகளிடையே கொரோனாத் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்குடன், விசாரணைக் கைதிகளை பல மாநில அரசுகள் விடுதலை செய்து வரும் நிலையில் தமிழக அரசு தற்போது மேலும் 266 விசாரணைக் கைதிகளை விடுதலை செய்ய உள்ளது. 

இது தொடர்பாக தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். சிறையில் கைதிகளிடையே கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுக்க மாநில அரசுகள் அவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. இதற்கென மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு அமைக்கலாம் எனவும் யோசனைத் தெரிவித்துள்ளது.

        இதன் அடிப்படையில் டெல்லி திகார் சிறையில் 3000 விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என சிறைத்துறை தெரிவித்தது. மேலும் கோவை மத்திய சிறையில் 136 விசாரணைக் கைதிகள் உட்பட தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து 266 கைதிகள் சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். 

      இச்சூழலில் தமிழக சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் தற்போதைய சூழலை கவனத்தில் கொண்டு அடுத்த கட்டமாக 2642 விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சிறைக்கு வரும் கைதிகள் உரிய மருத்துவ    சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அறிகுறிகள் தென்பட்டால் 14 நாள்கள் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் திட்டமும் அரசிடம் உள்ளதென அமைச்சர் தெரிவித்தார்.