புனே: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 5,454 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. உச்சக்கட்ட  கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
நாட்டில், கொரோனா பாதிப்பு பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழகம், டெல்லி, குஜராத் ஆகியவை உள்ளன.  மகாராஷ்டிராவில் மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று அதிக அளவில் உள்ளது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதுவரை 70 போலீசார் உயிரிழந்துள்ளனர்.  இதன் மூலம் கொரோனா பாதிப்புக்கு ஆளான போலீசாரின் எண்ணிக்கை 5,454 ஆக உயர்ந்துள்ளது.