காத்மண்ட்:

தெற்கு நேபாளம் பகுதியில் வீசிய கடும் புயலுக்கு 29 பேர் பலியானார்கள்.


நேபாள் நாட்டின் தெற்கு பகுதியில் கடந்த மார்ச் 31-ம் தேதி வீசிய கடும் புயலில் 29 பேர் பலியானதாகவும்,600 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்தன. நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் காற்றில் இழுத்துச் செல்லப்பட்டன.

மேலும் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். நேபாளில் பெரும்பாலான வீடுகளின் மேற்கூரை இரும்பால் ஆனது குறிப்பிடத்தக்கது.

காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பேட்டா மற்றும் புலாஹி பகுதியைச் சேர்ந்தவர்கள். கடும் புயலுக்கு இப்பகுதிதான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பஸ்ரா மாவட்ட போலீஸாரின் கூற்றுப்படி பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.

மீட்புப் பணிகளை நேபாள் அரசு துரிதப்படுத்தியுள்ளது. இழப்பு குறித்த மதிப்பீட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.