டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜா, திமுக எம்.பி.கனிமொழி மீதான 2ஜி வழக்கில், சிபிஐ, அமலாக்கத்துறை தொடுத்த மேல்முறையீடு வழக்கை விசாரிக்க தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், டிசம்பர் 1ந்தேதி விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது, மத்திய தொலை தொடர்பு அமைச்சராக ராஜா பதவி வகித்தார். அப்போது,  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.76 லட்சம் கோடி  முறைகேடு நடைபெற்றதாகவும், இந்த முறை கேட்டில் அமைச்சர் ராஜாவுடன், திமுக எம்.பி. கனிமொழி உள்பட பலர் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம்,  ராஜா, கனிமொழி உள்பட14 பேரையும் விடுதலை செய்து கடந்த  2017ம் ஆண்டு  டிசம்பர் 21ந்தேதி அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.  பின்னர், சிபிஐ வலியுறுத்தியதின் பேரில்,  ஜூலை 30ந்தேதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று முடக்கம் காரணமாக விசாரணை நடத்தப்படாமல் முடங்கியது.. இதையடுத்து, வழக்கை விரைவாக விசாரிக்க கோரி, சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து. வழக்கு  தினசரி  பிற்பகல் 2.30 மணிக்கு தினசரி விசாரணை  தொடங்கும் என  டில்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி சமீபத்தில் விசாரணை தொடங்கியது. இதையடுத்து, ராஜா, கனிமொழி தரப்பில், சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீட்டை எதிர்த்து  மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, ராஜா, கனிமொழியின் மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும், அடுத்த விசாரணை டிசம்பர் 1ந்தேதி நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.  நீதிபதி பிரிஜேஷ் சேத்தி  நவம்பர் 30 ஆம் தேதி ஓய்வு பெறுவதால் 2 ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுகள் மற்றொரு நீதிபதி முன் பட்டியலிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.