புதுடெல்லி:

2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோரை கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் நடைபெற்றது.

அப்போது, இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று, சிபிஐ, அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி, 2ஜி வழக்கின் பிரதான மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்ய சிபிஐ, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களில் ஒரு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, அமலாக்கத் துறை பதில் அளிக்க, 10 நாள்கள் அவகாசம் அளித்தும்,விசாரணையை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.