காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது, திமுகவை சேர்ந்த ஆ.ராஜா தொலை தொடர்பு அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தததில், ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறை கேட்டில் அமைச்சர் ராஜாவுடன், திமுக எம்.பி. கனிமொழி உள்பட பலர் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், ராஜா, கனிமொழி உள்பட14 பேரையும் விடுதலை செய்து கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 21ந்தேதி அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. பின்னர், ஜூலை 30ந்தேதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று முடக்கம் காரணமாக விசாரணை நடத்தப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து, வழக்கை விரைவாக விசாரிக்க கோரி, சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து. இன்றுமுதல் தினசரி வழக்கின் விசாரணை நடைபெறும் என்றும், பிற்பகல் 2.30 மணிக்கு தினசரி விசாரணை தொடங்கும் என டில்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, இன்று விசாரணை தொடங்கி உள்ளது.