சேலம்:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  ரூ.33 கோடி செலவில்  உயர்மட்ட பாலம் உள்பட ரூ.40 கோடி செலவில் 3  பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்  4,049 பயனாளிகளுக்கு ரூ.12.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது,  அரசின் நலத்திட்ட சாதனைகள் குறித்த புள்ளி விவரங்கள் தெரியாமல் பேசி வருகிறார் ஸ்டாலின் என்று குற்றம் சாட்டினார்.

பாலம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி

சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், சேலம் கந்தம்பட்டி பைபாசில் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும்  உயர்மட்ட பாலப் பணிகள் கட்டப்பட உள்ளது. தற்போது  33 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான உயர்மட்டப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஏற்கனவே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலங்களால் சேலத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது என்றவர், சேலத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத, விபத்தில்லாத பகுதியாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

மேலும்,  சேலத்தில் ‘பஸ் போர்ட்’ என்ற பெயரில் அதிநவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது என்றும், அதற்கான  விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் எப்போதும் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்,  தூங்கும்போது கூட மு.க.ஸ்டாலின் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்  என்ற முதல்வர்,  அரசின் திட்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைப்பதை பொறுக்க முடியாமல் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார்.

தமிழக முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படு கிறது என்றவர்,  பொங்கல் பரிசை தடுக்க திமுக முயற்சி செய்தது என்றும் குற்றம் சாட்டினார்.

கிராமங்கள்தான் கோவில் என்பதை இப்போதுதான் மு.க.ஸ்டாலின் கண்டுபிடித்திருக்கிறார் நாங்கள் கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள், மு.க.ஸ்டாலின் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர் என்ற எடப்பாடி, அரசின் நலத்திட்ட சாதனைகள் குறித்த புள்ளி விவரங்கள் தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்  என்றும்,  மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதை வழக்கு போட்டு தடுக்க முயன்றது திமுக. கிராம சபை கூட்டத்தில் அரசை பற்றி ஸ்டாலின் தவறான தகவல்களை பேசி வருகிறார் என்றவர், அரசின்  நலத்திட்டங்களுக்கு யார், எந்த தடைகள் போட்டாலும் அதை தகர்த்து எறிவோம்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.