திருமலை:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த,  திருமலையில் இன்று ஸ்ரீசீனிவாச சாந்தி உத்ஸவ சஹீத தன்வந்திரி மகா யாகம் தொடங்கப்பட்டது.

உலக மக்களை காக்க பெருமாள் எடுத்த அவதாரங்களில் ஒன்று தன்வந்திரி. இந்த அவதாரத்தின்போது பெருமாளின் திருக்கரங்களில் சங்கு,சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை காணப்படும். இந்த அவதாரத்தின்போது பெருமாள் நோய்களை தீர்க்கும் தெய்வீக மருத்துவராக அருள்புரிந்தார்.

உலக நன்மைக்காக அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியுள்ள தன்வந்திரியை ஆயுர்வேத மருத்துவர் என்றும், அவரை வணங்கினால் கொடிய நோய்களும் குணமாகும் என்று ஆச்சாரியார்கள் கூறுகின்றனர். இந்து மக்களிடையே தன்வந்திரி பெருமாளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் நோக்கில் தன்வந்திரி பகவானை முறையிடும் வகையில் சிறப்பு யாகம் திருப்பதி தேவஸ்தானம் சார்பில்  திருமலையில் தொடங்கப்பட்டு உள்ளது.

திருமலையில் உள்ள தர்மகிரி வேதபாடசாலையில் தன்வந்திரி யாகம் இன்று  காலை முதல் தொடங்கியது. தென்னிந்தியாவிலிருந்து வந்த வேத விற்பன்னர்கள் இந்த யாகத்தை   நடத்தி வருகின்றனர். இந்த யாகும் 3வது நாளான  வரும் 28ம் தேதி காலை மகாபூர்ணாஹூதியுடன் தன்வந்திரியாகம் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.