புதுச்சேரி: மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சில பகுதிகளில் நாளைமுதல் 3 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். அதன்படி, நாளை 9ந்தேதி முதல் 11ந்தேதி வரை ஏனாம் பகுதியில் முழு ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 7வது கட்ட ஊரடங்கு ஆகஸ்டு 30ந்தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு தகுந்தவாறு மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மத்தியஅரசும் பச்சைக்கொடி காட்டி உள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும், முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, மாநிலத்தின் ஏனாம் பகுதியில் நாளை முதல் 11ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த ஊரடங்கின்போது, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் காலை 6-8 மணி வரையும் மாலை 6 – 8 மணி வரையும், மருந்துக்கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அறிவித்துள்ளது.